Saturday, August 2, 2014

உணவு பழக்கமும், உடல் நோய்களும்.

"எண் சாண் உடம்பிற்கு சிரசே பிரதானம்" இது முதுமொழி. "நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்" இது பழமொழி. "நோயற்ற வாழ்விற்கு நல்  உணவு முறையே  பிரதானம்"  இது என் மொழி.
மனிதரும் எந்திரம் மாதிரி வேலை செய்து பொருள் ஈட்டி வாழ்க்கை நடத்தும் இந்த நாட்களில் உணவை பற்றியோ, நோயை பற்றியோ நினைப்பதற்குகூட நேரம் இன்றி, பிடித்த உணவுகளை (அவை உடல் நலத்திற்கு நலம் பயக்குமா இல்லையா என அறியாமல்) நமக்கு கிடைத்த நேரத்தில் புசித்து/அருந்தி வரும் நாம் அனைவரும் கண்டிப்பாக அறிந்து கொள்ள வேண்டிய பல செய்திகள் இந்த நிகழ்ச்சியின் மூலம் நாம் அனைவரும் தெரிந்து கொள்ள போகிறோம் என்பதே இந்த நிகழ்ச்சியின் முதல் வெற்றியாகும்.  
தற்போது பலப்பல ஊடகங்களின் வாயிலாக மக்கள் உடல்
நோய்களைபற்றியும், ஆரோக்ய உணவுகளைபற்றியும்
தெரிந்து கொண்டாலும், அவற்றை நடைமுறை படுத்துவதில் பல நடைமுறை சிக்கல்களை அனுதினமும் அனுபவித்து வருகின்றனர். இந்த தருணத்தில் நாம் அனைவரும் சிந்திக்க  வேண்டிய ஒரு தகவல் 'நம் உடல் நலம் எல்லா பருவங்களிலும் (குழந்தை, இளைய பருவம், நடுத்தர வயதினர், முதியோர்) நன்கு பேணி பாதுகாக்கப்படவேண்டும்'  என்பதே.
ஒருவரின் நடத்தை முறைகளை வைத்து அவரின் வாழக்கை  முறை அமைகிறது. ஒருவரின் உணவு முறைகளை வைத்து அவரின் நோயற்ற வாழ்வு (குறைவற்ற செல்வம்) அமைகிறது.     
 நாம் இப்போது தலைப்புக்கு வருவோம். உணவு பழக்கம் எப்படி உடல் நலத்தோடு சம்பந்தப்படும்? ஆமாம். கண்டிப்பாக சம்பந்தப்பட்டதே. எப்படியெனில், உலகெங்கும் உணவு முறைகள் அந்தந்த நாடுகளின் விளை  பொருட்கள் மற்றும் தட்பவெப்ப நிலைகளோடும் சார்ந்தே உள்ளது. இது இயற்கையின் நியதி. ஆனால், இந்த விதிமுறைகள் இப்பொழுது சரியாக கடை பிடிக்கபடுவதில்லை. உண்ணும் உணவும் அதற்கேற்ற உழைப்பும் நம்மிடையே தற்போது குறைந்து வருகிறது.         
மனித உடலும் கடவுளால் படைக்கப்பட்ட ஒரு யந்திரமே. ஆனால் இது ஒரு விந்தையான யந்திரம் (மனித மூளையின் கூறுகள் இன்னும் ஆராய்ய்சிக்குட்பட்ட  நிலையிலேயே உள்ளன). அதனை பழுதாகாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது நம் ஒவ்வொருவர் கடமை. இதற்கு முதல் முக்கியம் நம் உணவு முறை. நாம் அமைத்துக்கொள்ளும் உணவு பழக்க வழக்கங்களே நாம் நோய் நொடியின்றி மேம்பட்ட வாழ்க்கை வாழ உதவுகிறது.        
உண்ணும் உணவு நம்மை எவ்வாறு நோய்களில் இருந்து காக்கிறது என இப்பொழுது பாப்போம்.  முதலில் உணவு உடல் ஆரோக்யத்திற்கு ஏற்றதாகவும், நம்மை நோய்களில் இருந்து காப்பதாகவும் இருப்பது மிகவும் அவசியம். அடுத்தது உணவின் அளவு. நாம் அதிகமாக உண்டால், அதனால் உடல் எடை கூடி அதனால் இதய நோய்களும், சர்க்கரை நோயும், ஆர்த்தரிடிஸ் போன்ற இன்னும் பல நோய்களும் ஏற்பட காரணமாகலாம். உணவு குறைவாக உண்டால், குறைந்த இரத்த அழுத்தம், உடல் எடை குறைவு (அதன்  விளைவாக ஏற்படும் பல நோய்கள்) ஆகியவற்றுக்கு  ஆட்பட கூடும்.

மிகவும் முக்கியமான ஒரு நியதி: சரியான நேரப்படி நாம் தினமும் உண்ண வேண்டும். ஏனெனில், நம் உடற் கூறுகளும், உடற்கடிகாரமும் (body clock) இயற்கையாகவே இந்த நியதியின் அடிப்படையில் இயங்குபவை. ஒரு நாளோ அல்லது சில நாட்களோ இந்த நியதி கடைப்பிடிக்க முடியாமல் போனால் அவை தம்மை அனுசரித்து கொள்ளும்.
அதுவே தினசரி பழக்கமாக மாறும்போது நாம் சில உடல் உபாதைகளை (like stomach ulcer etc.)எதிர்கொள்ள வேண்டி வருகிறது. மருத்துவர், இரவுப்பணியாளர்கள், உயர்பதவியில் இருப்போர் போன்றவர்கள் இத்தகைய உடல் உபாதைகளிலிருந்து விடுபட வேண்டுமெனில், அவர்கள் மற்ற அலுவல்களைபோல உணவு உண்ணும் நேரத்தையும் சரியாக பட்டியலிட்டு அதனை முறைபடுத்த வேண்டும். ஏனெனில் நம் உடல் ஆரோக்யத்தை பற்றி நாம்தானே  கவலைப்பட வேண்டும்.

உணவு திட வடிவிலோ, திரவ வடிவிலோ இருப்பினும் அது சத்துக்கள் நிறைந்ததாக இருப்பின் நல்லது. நம் உணவு பட்டியலில் தண்ணீரும் கண்டிப்பாக இடம் பெற்றிருக்க
வேண் டியது அவசியம். இது இரத்த சுத்திகரிப்புக்கும், சிறுநீரகம் மற்றும் வயிற்று பாகங்களை சுத்திகரிக்கவும் உதவுகிறது. நாம் உண்ணும் உணவு செரிமானமாகவும் உதவுகிறது.
இன்று உலகையே பயமுறுத்திக்கொண்டு இருக்கும் கான்செர் போன்ற நோய்களுக்கும் உணவுக்கும் நிறைய தொடர்பு இருக்கிறது. இரைப்பை கான்செர் நோய் வருவதற்குள்ள சில முக்கிய காரணிகளில் உணவு முக்கியத்துவம் வாய்ந்தது. ஒவ்வாமை, தோல் நோய்கள் மற்றும் பிற முக்கிய நோய்களுக்கும் உணவுக்கும் நிறைய தொடர்புவுள்ளது.
நாம் நோய், நொடியின்றி நலமுடன் வாழ நாம் உண்ணும் உணவில் சில சிறிய மாற்றங்களை செய்து, அதனை நாள்தோறும் தவறாமல் பின்பற்றினாலே சில நோய்களிலிருந்து தப்பிக்கலாம் அல்லது சில நோய்கள் தீவிரமடைவதை தவிர்க்கலாம்/குறைக்கலாம். சிற்சில உணவு மாற்றங்கள் மிக பெரிய உடல் உபாதைகளை சரிபடுத்தும். ஆரம்பத்தில் இந்த உணவு மாற்றங்கள் சிறிது கடினமாக இருந்தாலும், நாளடைவில் அது நம் பழக்கமாக மாறி நம் உடல் நலம் பேணும் மருத்துவராக துணை புரியும்.
உடல்நோய் எதுவும் இல்லாத ஒருவர் நல்ல சரி விகித உணவு உண்டாலே நலமுடன் வாழலாம்.
நாம் உண்ணும் உணவில் இருக்க வேண்டிய சில உணவு பண்டங்கள்:
பழங்கள், கீரைகள், சிறு தானியங்கள், சுத்தமான தண்ணீர், பயறு வகைகள், பாதாம் போன்ற கொட்டை வகை பருப்புகள், ஓட்ஸ் , காரட், அவோகாடோ போன்ற காய்கறிகள், மீன், மற்றும் நார் சத்து மிகுந்த உணவு பண்டங்கள்.



நாம் தவிர்க்க வேண்டிய சில உணவு பொருட்கள்:
சர்க்கரை, உப்பு, பால் & பால் பொருட்கள் ஆகியவற்றை ஒரு அளவோடு நம் உணவில் சேர்த்தல் போதுமானது. முதியோர் முடிந்தால் இவற்றை தவிர்ப்பது நல்லது.
பதப்படுதப்பட்ட உணவுகளை தவிர்ப்பது நலம். துரித உணவுகள் சுவைக்கு நன்றாக இருப்பினும் உடல் நலத்திற்கு கேடே. இவற்றை தவிர்ப்பதும் நல்லது. கொறிக்கும் உணவுகள் (junk food  or snacks) உடல் நலத்திற்கு எந்த நன்மையையும் விளைவிப்பதில்லை. எண்ணையில் வருத்த/பொறித்த உணவுகளை ஒரு அளவோடு உண்ணவும் அல்லது தவிர்ப்பது மிகவும் நல்லது. இதனால் உடல் கொழுப்பு அதிகரிப்பது தவிர்க்கப்படும்.



ஹார்வர்ட் பல்கலை கழகத்தால் வெளியிடப்பட்ட சரிவிகித உணவுமுறையை நாம் இங்கே காணலாம்.

இந்த முறையில் நம் உணவு முறைகளை அமைத்துக்கொண்டு அவற்றை சரிவர நிதமும் முறைபடுத்தி உண்ணுவோமேயாகில், நான் கண்டிப்பாக சொல்வேன் 'நம் ஆரோக்கியம் நம் உணவில் மட்டும்தான்' என்று. 
நம்மிடையே காணமல் போன சில உணவுகளும், உணவு முறைகளும் சில:
 1. மண் பாண்டங்கள், பித்தளை, வெண்கலம், கல்சட்டி,   ஈயப்
     பாத்திரம் போன்றவற்றை சமையல் அறையில் பார்க்கவே
     முடிவதில்லை.   சில காட்சி பொருளாக வரவேற்பறையை        
     அலங்கரிக்கின்றன.
 2. வாழை  இலையில் தரையில் அமர்ந்து உணவருந்தும் பழக்கம்
     அருகி வருகிறது.
 3. அம்மி/உரல்/ஏந்திரம் இவற்றிக்கு பதிலாக mixie/grinder/oven
      நம் சமையல் அறையை அலங்கரிக்கின்றன. அவையும்
      உபயோகபடுத்துவது குறைந்து வருகிறது. ஏனெனில்,
      சிற்றுண்டி சமைக்க உதவும் மாவிலிருந்து, அனைத்தும்
      கடைகளில் தயாரித்து, விற்பனை செய்கின்றனர்.
. 4. சப்பாத்தி செய்யும் கல்லும் குழவியும் பார்ப்பது ரொம்ப கடினம்.
      மின்சாரத்தில் இயங்கும் சாதனமும் , ready-to-eat                            
      சப்பாதியும்தான் நடைமுறையில் உள்ளன.
   5.ஆரோக்யமாக சமைப்பது என்பதே மிக மிக குறைந்து வருகிறது.
       நாடெங்கும் சிற்றுண்டிசாலைகள் (பேருண்டிக்கும் இவையே
       துணை)பெருகி, சமையல் அறை என்பது நகர் புறங்களில் காட்சி
       பொருளாகவே அனேக வீடுகளில் மாறிவிட்டது.
நாம் நம் ஆரோக்யத்தை பேணிக்காத்தால், நம் வீட்டுக்கும், நாட்டுக்கும் நன்கு சேவையாற்ற முடியும். இவற்றை நாமும் கடை பிடித்து, நம்மை சுற்றி உள்ளவர்களையும் கடைப்பிடிக்க செய்து, அதன்  விளைவாக ஏற்படும் நன்மைகளைக் கண்டு மகிழ்ந்து, மேன்மேயான வாழ்வு வாழுவோம்.
"உணவே மருந்து என நம் வாழ்க்கையை அமைத்து, மருந்தே உணவு அல்ல என இன்று (சுதந்திர தினத்தன்று) முதல் சூளுரைத்து  நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்"  என நலமுடன் வாழ்வோமாக!
வாழ்க பாரதம்!   வளர்க இந்தியா!!